வேப்பூர், மே 10: வேப்பூர் அடுத்த சேதுவராயன்குப்பத்தை சேர்ந்தவர் பெரியசாமி மகன் கோவிந்தசாமி (45). விவசாயியான இவர் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு கோவிந்தசாமி தனது கொட்டகையில் ஆடு, மாடு ஆகியவற்றை கட்டி வைத்திருந்தார். இரவு 7 மணி அளவில் திடீரென காற்றுடன் கூடிய மழை பெய்தது. அப்போது, கோவிந்தசாமியின் மாட்டுக் கொட்டகை அருகே இருந்த இலுப்பை மரம் முறிந்து மாட்டுக் கொட்டகையின் மீதும் அருகிலிருந்த வீடுகள் மீதும் விழுந்தது. இதில் மாட்டுக் கொட்டகையில் இருந்த ஒரு மாடு, மூன்று ஆடு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. வீடும் சேதமடைந்தது. இதுகுறித்து தகவலறிந்து வந்த ஊராட்சி மன்ற தலைவர் விஜயலட்சுமி அறிவுறுத்தலின் வீட்டின் மீது விழுந்திருந்த மரங்கள் உடனடியாக இயந்திரங்கள் மூலம் அப்புறப்படுத்தப்பட்டது. இதையடுத்து நேற்று காலை 9 மணியளவில் உயிரிழந்த மாடு, ஆடுகளை கால்நடை உதவி மருத்துவர் முத்தமிழ்ச்செல்வன் பரிசோதனை செய்த பின்னர் கால்நடைகள் புதைக்கப்பட்டது. இதையடுத்து வருவாய் ஆய்வாளர் மாலா, கிராம நிர்வாக அலுவலர் வீரராஜ் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். இதில் கோவிந்தசாமியின் மாடு, ஆடுகள் மற்றும் வீடு என 1.50 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்துள்ளது.