பாபநாசம், மே10: கபிஸ்தலம் காவிரிக்கரையில் தினசரி கொட்டும் கோழிக்கழிவுகளால் மக்கள் அவதியுற்று வருகின்றனர். இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர். கபிஸ்தலம் மற்றும் மேல கபிஸ்தலம் ஊராட்சிகளுக்கு நடுவில் அமைந்துள்ளது கபிஸ்தலம் பாலக்கரை. இந்த பகுதியில் சுமார் 25க்கும் மேற்பட்ட இறைச்சிக் கடைகள் இயங்கி வருகின்றன. தினசரி இறைச்சிக் கடைகளில் கோழி, மீன் மற்றும் ஆட்டு இறைச்சி கழிவுகளை சம்பந்தப்பட்டவர்கள் காவிரிக்கரையில் கொட்டி விட்டு சென்று விடுகின்றனர். இதனால் காவிரி கரை முழுவதும் பாழடைந்து கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. இந்த காவிரிக்கரை வழியாக தான் தினசரி விவசாயம் செய்ய விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், அந்தப் பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள், பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் சென்று வருகின்றனர். இப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதால் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. தற்பொழுது கோழி, மீன், இறைச்சி கழிவுகளை காவிரிக் கரையோரம் கொட்டி விட்டு செல்வதால் ஏற்படும் துர்நாற்றத்தில் சிக்கி தவிக்கின்றனர். இதனை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடன் நடவடிக்கை மேற்கொண்டு கோழி, மீன், இறைச்சி கழிவுகளை இங்கு கொட்டுவதை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.