மோகனூர், மே 3: மோகனூர் அருகே, எஸ்.வாழவந்தியில், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற 18 பட்டி கிராமத்திற்கும் சொந்தமான மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கடந்த 19ம் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதையடுத்து தினசரி அம்மன் ஊர்வலம் நடந்தது. நேற்று முன்தினம் (1ம் தேதி) இரவு வடிசோறு பூஜை, நேற்று மாவிளக்கு பூஜை நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் உருளுதண்டம் போட்டும், அக்னிசட்டி எடுத்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர், கொமாரபாளையம் காவிரி ஆற்றில் புனித நீராடி, 5 கிலோ மீட்டர் தூரம் அம்மனை ஊர்வலமாக எடுத்து வந்து, தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு முஸ்லீம் சகோதரர்களுக்கு மாலையிட்டு மரியாதை செய்து, வாண வேடிக்கை நிகழ்ச்சி நடந்தது.