ஆவடி: கருணாகரச்சேரி ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் அமைச்சர் ஆவடி நாசர் கலந்துகொண்டார். பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியம் கருணாகரச்சேரி ஊராட்சியில் அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ, ஊராட்சி மன்ற தலைவர் பத்மாவதி கைலாசம் உள்ளிட்ட அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டனர்.
அப்போது ஊராட்சியில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கவேண்டும். கருணாகரசேரி அமூதூர்மேடு இடையே மேம்பாலம் அமைக்க வேண்டும். பேருந்து வசதிசெய்து தரவேண்டும். குடிநீர், பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தை தொடர்ந்து வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். குறிப்பாக மின் பிரச்னைக்கு தீர்வு காணவேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.
இதனை கேட்ட அமைச்சர் நாசர் உடனடியாக செய்து கொடுப்பதாக அவர்களிடம் உறுதியளித்தார். ஆனால் கூட்டத்திற்கு மின்வாரிய அதிகாரிகள் யாரும் வரவில்லை. இருந்தபோதிலும் பொதுமக்களின் புகார்களை அமைச்சர் குறித்துக்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக கூறினார். மேலும், ஊராட்சியில் பணியாற்றும் துப்புரவு தொழிலாளர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி தரவேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர். உடனடியாக ஊதிய உயர்வு குறித்து அமைச்சர், கலெக்டரிடம் பரிந்துரை செய்தார்.