கம்பம் ஏப் 28: கம்பம் புதிய பஸ்நிலையம் அருகே தனியார் தங்கும் விடுதி உள்ளது. இங்கு கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், சக்குப்பள்ளத்தை சேர்ந்த தேவசியா ஆபிரகாம் (52) என்பவர் கடந்த ஏப்.22ம் தேதி முதல் தங்கியிருந்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை தேவசியா ஆபிரகாம் அறையில் இருந்து வெளியே வராமல் இருந்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த விடுதி ஊழியர்கள் அறைக்கு சென்று பார்த்தபோது தேவசியா ஆபிரகாம் கட்டிலில் இறந்த நிலையில் கிடந்துள்ளார். இதுகுறித்து விடுதி ஊழியர்கள் கம்பம் தெற்கு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபாண்டி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தேவசியா ஆபிரகாமை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த தேவசியா ஆபிரகாம் அளவிற்கு அதிகமாக மது குடித்திருந்தாகவும், அதனால் இறந்துள்ளதாகவும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.