திருப்பூர், ஏப்.28: திருப்பூர், அவிநாசி ரோடு, பெரியார்காலனி பகுதியில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த கருப்பராயன் கோவில் உள்ளது. இந்த கருப்பராயன் கோவிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வந்து சாமிதரிசனம் செய்து செல்வார்கள். இந்நிலையில், கடந்த 20ம் தேதி கோவில் பொங்கல் விழா தொடங்கி நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நாளான நேற்று காலை 6 மணி முதல் கருப்பராய சுவாமி, கன்னிமார் சுவாமி மாவிளக்கும் மற்றும் பொங்கல், கிடா வெட்டு விழா நடைபெற்றது. நேற்று கருப்பராய சாமிக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்து. பக்தர்கள் நேற்று கோவில் வளாகத்தில் மாவிளக்கு எடுத்து பொங்கல் வைத்து கிடாய் வெட்டி வேண்டுதல்களை நிறைவேற்றினர். மேலும் மாலை கருப்பராய சாமி திருவீதி உலா அனுப்பர்பாளையம் புதூரிலிருந்து மேள தாளங்களுடன் துவங்கி முக்கிய வீதிகளின் வழியாக சாமி கோவிலை வந்தடைந்தது. இந்த திருவீதி உலாவின் போது சினிமா புகழ் பெற்ற குதிரை நடன நிகழ்ச்சியும், கலைநிகழ்ச்சிகளும், வாண வேடிக்கைகளும் நடைபெற்றது. விழாவின் முக்கிய நாளான நேற்று ஏராளமான பக்தர் சாமி தரிசனம் செய்தனர். மேலும், இன்று மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெற உள்ளது.