×

நாகர்கோவில் தொடக்கப்பள்ளியில் மாணவிகளிடம் சில்மிஷம் செய்த தலைமை ஆசிரியர் கைது போக்சோ சட்டத்தில் வழக்கு

நாகர்கோவில், ஏப். 28: நாகர்கோவிலில் 5ம் வகுப்பு மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட அரசு பள்ளி தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டார். நாகர்கோவில் பறக்கை கணபதிபுரம் பகுதியை சேர்ந்தவர் நித்ய லெட்சுமண வேல் (59). இவர் நாகர்கோவிலிலில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக உள்ளார். அந்த பள்ளி 5ம் வகுப்பு மாணவிகள் சிலரிடம் நித்யலெட்சுமணவேல் சில்மிஷத்தில் ஈடுபட்டு,  மிரட்டியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சைல்டு ைலன் 1098  மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் ஆகியவற்றுக்கு புகார்கள் சென்றன. இந்த புகார்  தொடர்பாக குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஷகிலா பானு விசாரணை மேற்கொண்டார்.

பாதிக்கப்பட்ட மாணவிகள் மட்டுமின்றி, அந்த பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள், பணியாளர்கள் சிலரிடமும் ரகசிய விசாரணை நடந்தது. இந்த விசாரணையின் அடிப்படையில் ஆசிரியர் நித்ய லெட்சுமண வேல், 5ம் வகுப்பு மாணவிகள் 3 பேரிடம்  சில்மிஷம் செய்தது தெரிய வந்தது. இது பற்றி குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், ஷகிலா பானு எஸ்.பி. ஹரிகிரண் பிரசாத்திடம் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்த எஸ்.பி. உத்தரவிட்டார். போலீசார் விசாரணை நடத்தி  தலைமை ஆசிரியர் நித்ய லெட்சுமண வேல் மீது போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, நேற்று கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தற்போது கல்வித்துறை அதிகாரிகள் விசாரணையும் நடந்து வருகிறது. தலைமை ஆசிரியர் நித்ய லெட்சுமண வேல் சஸ்பெண்ட் செய்யப்படுவார் என அதிகாரிகள் கூறினர். நித்திய லட்சுமண வேல் ஏற்கனவே நாகர்கோவிலில் மற்றொரு பள்ளியில் பணியாற்றியபோது இது போன்ற புகாரின் அடிப்படையில் தான் தற்போது பணியாற்றும் பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

Tags : Nagercoil Primary School ,
× RELATED நாகர்கோவில் தொடக்கப்பள்ளியில் ...