போடி, ஏப். 25: போடி அருகே மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் தென் திருவண்ணாமலை என அழைக்கப்படும் அருள்மிகு பரமசிவன் மலைக்கோயில் உள்ளது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில், கடந்த 15ம் தேதி சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை தொடர்ந்து தினசரி பூஜைகள், பால்குடம் மற்றும் காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும், பரமசிவன் உற்சவரை சப்பரத்தில் ஏற்றி கோயில் மலையடிவாரத்தில், கிரிவலப்பாதையில் சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சிளித்தார். எட்டாவது நாளில் உற்சவரான பரமசிவனை சப்பரத்தில் ஏற்றி டிராக்டர் மூலமாக போடி கட்டபொம்மன் சிலை அருகில் திடலில் கொண்டு வந்து, பக்தர்களின் தரிசனத்துக்கு வைத்தனர். இதையொட்டி சுவாமிக்கு பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர் உற்சவர் பரமசிவனை மறுபடியும் சப்பரத்தில் ஏற்றி திரும்பவும் மலைக் கோயிலுக்குச் கொண்டு சென்றனர். இதை தொடர்ந்து கொடி இறக்கப்பட்டு திருவிழா நிறைவு பெற்றது.