கரூர், ஏப். 25: கருர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: கரூர் மாவட்டத்தில் சிறுபான்மையின சமுதாயத்தை சேர்ந்த பின்தங்கிய நிலையில் உள்ள கிறிஸ்தவ மகளிர்களுக்கு உதவும் வகையில் மாவட்ட கலெக்டரை தலைவராக கொண்டு 2018ம் ஆண்டு கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கம் துவக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. சிறுபான்மையின சமுதாயத்தை சேர்ந்த ஆதவற்ற மற்றும் ஏழ்மை நிலையில் உள்ள மகளிர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் சிறுதொழில் செய்வதற்கு உதவித்தொகைகளை வழங்கி அவர்களின் பொருளாதார வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில் இந்த சங்கம் ஏற்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதே போல, மாவட்ட கலெக்டரை தலைவராக கொண்டு தேவையின் அடிப்படையில் கூடுதலாக ஒரு கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கம் துவங்கப்படவுள்ளது. இந்த சங்கத்தில் ஒரு கவுரவ செயலாளர், இரண்டு கவுரவ இணைச் செயலாளர்கள், மூன்று உறுப்பினர்கள் கருர் மாவட்டத்தில் வசிக்கும் கிறிஸ்தவர்களில் சமூக பணிகளி எந்தவித புகார்களுக்கும் இடமின்றி சமூக ஆர்வத்துடன் செயல்படக்கூடிய தலைசிறந்த பிரமுகர்கள் மாவட்ட கலெக்டரால் தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்பட உள்ளனர்.
கரூர் மாவட்டத்தில் ஆதரவற்ற மற்றும் ஏழ்மை நிலையில் உள்ள கிறிஸ்தவ பெண்களுக்கு உதவிடும் வகையில் கிறித்துவ மகளிர் உதவும் சங்கத்தில் பணியாற்றிட விருப்பம் உள்ள ஆண் மற்றும் பெண் விண்ணப்பத்தாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பம் உள்ளவர்கள் தங்களது முழு விபரங்கள் அடங்கிய புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பத்தை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் ஏப்ரல் 30ம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.