×

இரணியல் அருகே டிரைவர் வீட்டில் நகை திருட்டு மர்ம நபருக்கு போலீஸ் வலை


திங்கள்சந்தை, ஏப். 25: இரணியல் அருகே வீடு புகுந்து நகை பெட்டியுடன் தங்க நகையை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இரணியல் அருகே வில்லுக்குறி அடுத்த கரிஞ்சான்கோடு பகுதியை சேர்ந்தவர் நாகராஜன் (41). வாடகை வண்டி ஓட்டி வருகிறார். சம்பவத்தன்று இரவு குடும்பத்துடன் தூங்கி விட்டனர். இந்த நிலையில் அதிகாலை சுமார் 4.30 மணி அளவில் அவரது மனைவி கண் விழித்து பார்த்து உள்ளார். அப்போது வீட்டில் இருந்த பீரோ திறந்த நிலையில் கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே பீரோவின் அருகில் சென்று பார்த்துள்ளார். அதில் இருந்த தங்க நகைகள் பெட்டியை காணவில்லை. நகை பெட்டியில் இருந்த 8 கிராம் செயின், 12 கிராம் நெக்லஸ், 6 கிராம் எடை கொண்ட 3 மோதிரம், 12 கிராம் எடை உள்ள 3 ஜோடி கம்மல் உள்பட மொத்தம் 41 கிராம் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்று உள்ளது தெரியவந்தது.
இது தொடர்பாக நாகராஜன் இரணியல் காவல் நிலையத்தில் புகார் செய்தார். நகை பெட்டியுடன் தங்க நகைகளை அபேஸ் செய்து சென்ற மர்ம நபர் யார்? என்பது உடனடியாக தெரியவில்லை. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்மூர்த்தி மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் இரணியல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Eraniyal ,
× RELATED இரணியல் அருகே கால்வாய் உடைந்து...