பழநி, ஏப். 23: அறுபடை வீடுகளில் 3ம் படைவீடாக விளங்குவது பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில். இக்கோயிலில் தைப்பூசம் மற்றும் பங்குனி உத்திரத் திருவிழா விமரிசையாக நடக்கும். இதில், லட்சக்கணக்கான பக்தர்கள் பழநி கோயிலில் சாமி தரிசனம் செய்து செல்வது வழக்கம். இந்நிலையில், பங்குனி உத்திரத் திருவிழா முடிந்து 1 மாதத்திற்கு மேலாகியும், பழநி கோயிலுக்கு காவடி எடுத்து வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன்படி திருச்சி மாவட்டம், துவாக்குடியைச் சேர்ந்த முருக பக்தர்கள் ஸ்டார் காவடி எடுத்து வந்தும், அலகு குத்தியும் கிரிவலம் வந்தனர். தொடர்ந்து மலைக்கோயிலில் சாமி தரிசனம் செய்தனர். இதுபோல் ஈரோடு மாவட்டம், கொடுமுடியில் இருந்து தற்போதும் ஏராளமான பக்தர்கள் தீர்த்தக் காவடி எடுத்து வந்து பழநி முருகனை அபிஷேகம் செய்து வழிபாடு செய்து வருகின்றனர். பக்தர்கள் வருகை இருப்பதால் போலீசார் பாதுகாப்பு மற்றும் ரோந்துப் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.