திண்டுக்கல், ஏப். 21: திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விசாகன் தெரிவித்ததாவது: தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறையின் கீழ் இயங்கி வரும் திண்டுக்கல் மாவட்ட கலை மன்றத்தின் வாயிலாக மாவட்ட அளவில் அகவை மற்றும் கலைப்புலமை அடிப்படையில் சிறந்த 15 கலைஞர்கள் விருதுகள் வழங்கிட தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவ்விருதுகளை தமிழ்நாட்டின் கலை பண்புகளை மேம்படுத்தும், பாதுகாக்கும் நோக்கிலும், கலைஞர்களை சிறப்பிக்கும் வகையிலும் வழங்கப்பட உள்ளது. மாவட்ட கலை மன்றங்களின் வாயிலாக 2002-2003ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் சிறந்த 5 கலைஞர்களுக்கு கலை விருதுகள் வழங்கிட அரசு ஆணையிட்டுள்ளது.
இந்த ஆண்டு விருதுகள் வழங்க திண்டுக்கல் கலெக்டர் தலைமையில் கடந்த ஏப்.7ம் தேதி தேர்வுக்குழு கூட்டம் நடந்தது. பதவி வழி மற்றும் பதவி சாரா உறுப்பினர்கள் கலந்து கொண்டு விண்ணப்பங்களை பரிசீலனை செய்து, மாவட்ட அளவில் சிறந்த கலைஞர்களை வயது-கலைப்புலமை அடிப்படையில் தேர்வு செய்துள்ளனர். அதன்படி, 2021-22ம் ஆண்டு விருதாளர்கள் விவரம் வருமாறு: கலை இளமணி விருது: ஹர்த்திப் பெருமாள்- பரதம், ஹரிஸ் விஜய்- கிராமிய நடனம், ராமகிருஷ்ணன்- நாதஸ்வரம். கலை வளர்மணி விருது: வேங்கை நாதன்- சிலம்பம், முத்துப்பாண்டி - தப்பாட்டம், வீராச்சாமி - உறுமி. கலைச்சுடர்மணி விருது: ஆண்டிச்சாமி- நாடகம், முருகேஸ்வரி- கும்மி, மூர்த்தி - தப்பாட்டம், கலை நன்மணி விருது: ஆறுமுகம் - குரலிசை, அம்மாசி (எ) ஆசைத்தம்பி - நாடகம், சேகர்- மிருதங்கம். கலை முதுமணி விருது: சாந்தகுமாரி- தவில், மாரியப்ப முதலியார்- நாதஸ்வரம், சுப்புத்தாய் - கரகாட்டம்.
மேற்படி விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்ட கலைஞர்களுக்கு திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெறவுள்ள அரசு விழாவில் விருதுக்கான பொற்கிழி பட்டயம் மற்றும் பொன்னாடை வழங்கி கவுரவிக்கப்படுவர். இவ்வாறு தெரிவித்தார்.