பீளமேடு,ஏப்.21:இந்தியாவில் இரும்பு, செம்பு, சிமெண்ட் உள்பட தொழிற்சாலைகளுக்கு தேவையான அனைத்து மூலப் பொருட்களின் விலையும் பல மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் உற்பத்தி துறையினர் கடும் நெருக்கடிக்குள்ளாகி உள்ளன. அதிலும் குறிப்பாக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் மூடப்படும் அபாய நிலையில் உள்ளன. எனவே நாள்தோறும் உயர்ந்து வரும் மூலப்பொருட்களின் விலையை கட்டுப்படுத்த கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவையை சேர்ந்த தொழில் முனைவோர் சென்னை சென்று முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார்கள்.
இந்நிலையில் டெல்லி சென்று மத்திய மந்திரிகளை சந்தித்து மூலப்பொருட்களின் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்ள உள்ளனர். இதுகுறித்து கொடிசியா தலைவர் ரமேஷ்பாபு கூறியதாவது: டெல்லியில் வருகிற 27 மற்றும் 28ம் தேதிகளில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் பற்றிய மாநாடு நடக்கிறது. இதில் பங்கேற்க கோவை தொழில்துறையினர் டெல்லி செல்ல உள்ளனர்.
அப்போது மத்திய மந்திரிகளை சந்தித்து பேச உள்ளோம். இதற்காக மத்திய மந்திரி பியூஸ்கோயலை சந்தித்து இரும்பு, செம்பு போன்ற தாதுப் பொருட்களை ஏற்றுமதி செய்வதை நிறுத்தி வைக்குமாறு கோரிக்கை விடுக்க உள்ளோம். ஏற்றுமதியை நிறுத்துவதின் மூலம் உள்நாட்டில் அவற்றின் விலை குறைய வாய்ப்புள்ளது. பஞ்சு மீதான இறக்குமதி வரியை ரத்து செய்தது போல வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மூலப் பொருட்கள் மீது விதிக்கப்படும் வரியை ரத்து செய்யும்மாறும் கோரிக்கை வைக்க வைக்க உள்ளோம்.
அதன்பின்னர் மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை மந்திரி ராமச்சந்திரன் பிரசாத் சிங்கை சந்தித்து மூலப் பொருட்களின் விலை உயர்வினால் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளன. அதிலிருந்து விடுபடும் வகையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கோரிக்கை வைக்க உள்ளோம்.
டெல்லியில் மத்திய மந்திரிகளை சந்திப்பதற்காக கோவையை சேர்ந்த தொழில் துறையினர் குழுவாக செல்ல உள்ளோம். இது தொடர்பாக அனைவருக்கும் தகவல்கள் தெரிவித்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.