ஈரோடு, ஏப். 21:காலிங்கராயன் மெயின் வாய்க்காலில் சாய, சலவை தொழிற்சாலைகளின் கழிவு நீர் கலந்து வந்ததையடுத்து அதை தடுக்கும் வகையில் பேபி வாய்க்கால் கட்டப்பட்டது. இந்நிலையில் பேபி வாய்க்காலில் குப்பைகள், செடி, கொடிகள் படர்ந்து தண்ணீர் ஓட்டத்தை தடுத்துள்ளதால் கழிவு நீர் ஆங்காங்கே தேங்கி நிற்கின்றது. ஒரு சில இடங்களில் கோழிக்கழிவுகள், தோல் தொழிற்சாலைகள் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதால் துர்நாற்றம் வீசி வருகின்றது.
குறிப்பாக வைராபாளையம் பகுதியில் பேபி வாய்க்காலில் தண்ணீர் வெளியேறாமல் தேங்கி நிற்கின்றது. எனவே தண்ணீர் தேங்கி உள்ள பகுதிகளில் தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள நீர்வளத்துறையினர் முன்வர வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.