சேத்தியாத்தோப்பு, ஏப். 21: புவனகிரி, கீரப்பாளையம், குமராட்சி, காட்டுமன்னார்கோவில், பரங்கிப்பேட்டை, குறிஞ்சிப்பாடி உள்ளிட்ட வட்டாரங்களில் உள்ள அரசு விதை சுத்திகரிப்பு நிலையம் மற்றும் தனியார் விதை விற்பனை நிலையங்களில் மாநில விதை ஆய்வு இணை இயக்குனர். மல்லிகா ஆய்வு நடத்தினார். நேற்று நடைபெற்ற ஆய்வின்போது விதைகளின் ஆவணங்கள், பதிவேடுகளை ஆய்வு செய்தார். வண்டுராயன்பட்டு கிராமத்தில் உள்ள அரசு விதை சுத்திகரிப்பு மையத்தில் விதை சுத்திகரிப்பு, உபகரணங்கள் மற்றும் விதை சுத்திகரிப்பு பணிகளை ஆய்வு செய்து கடைபிடிக்க வேண்டிய தொழில்நுட்பங்கள் குறித்து அலுவலகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார். மேலும் விவசாயிகள் உரிமம் பெற்ற விதை விற்பனை நிலையங்களில் மட்டுமே விதைகளை வாங்குமாறு அறிவுறுத்தினார். சான்று விதைகள் அதிக மகசூலை தருவதால் அவற்றை பயன்படுத்தவும், விவசாயிகள் விதை வாங்கும்பொழுது தவறாமல் விலைப்பட்டியலை கேட்டு வாங்குமாறு கேட்டுக்கொண்டார். அப்போது விழுப்புரம் மண்டல விதை ஆய்வு துணை இயக்குனர் சீனிவாசன், வேளாண்மை துணை இயக்குனர் பிரேம் சாந்தி, உதவி இயக்குனர் பிரேமலதா, விதை ஆய்வாளர்கள் தமிழ்வேல், ஜோதிமணி, விதை சான்று அலுவலர்கள் கலியபெருமாள், சுகந்தி, ஞானசேகரன் ஆகியோர் உடனிருந்தனர்.