குஜிலியம்பாறை, ஏப். 20:குஜிலியம்பாறை அருகே ராமகிரியில் மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ கல்யாண நரசிங்க பெருமாள் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் பங்குனி மாதம் திருவிழா நடைபெறும். தொடர்ந்து சித்திரை மாதத்தில் சித்ரா பவுர்ணமி கொண்டாடும் விதமாக ஸ்ரீ.கல்யாண நரசிங்க பெருமாள் உற்சவர் குதிரை வாகனத்தில் வீதி உலா வருவது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் குஜிலியம்பாறையில் வீதி உலா வந்தது. பஸ்ஸ்டாண்டு மெயின் ரோட்டில் வீதி உலா வந்த போது, ஸ்ரீ கல்யாண நரசிங்க பெருமாள் உற்சவரை சுற்றி கருடன் வட்டமடித்தபடி தொடர்ந்து வந்தது.
இதை கண்டு பக்தி பரவசத்தில் திளைத்த மக்கள் கோவிந்தா என கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து ஆர்.கொல்லபட்டி, பண்ணப்பட்டி, தளிப்பட்டி, தவசிப்பட்டி கிராமங்களில் வீதி உலா வந்தது. பின்னர் நேற்று உற்சவர் ராமகிரி கோயில் சென்றடைந்தது. வீதி உலா வந்த ஸ்ரீ கல்யாண நரசிங்க பெருமாள் உற்சவருக்கு பொதுமக்கள் அர்ச்சனை செய்து வழிபட்டனர். இதில் கோயில் மூத்த அர்ச்சகர் ராமகிருஷ்ணன், அர்ச்சகர்கள் ராஜேஷ், ரமேஷ், கோயில் மணியக்காரர் சதாசிவம் மற்றும் ராமகிரி கோயில் இளைஞர் நற்பணி மன்றத்தினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.