×

வாலிபரை கொலை செய்த தந்தை, மகனுக்கு ஆயுள்

திண்டுக்கல், ஏப். 19: திண்டுக்கல் கிழக்கு ராமநாதபுரத்தை சேர்ந்தவர் துரைச்சிங்கம் (63).  இவரது மகன் கண்ணன் (29). அதே பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து மகன் வீரபாண்டி (20). இவரது தங்கை பாவனாவுக்கும், கண்ணனுக்கும் 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. கருத்து வேறுபாட்டால் தம்பதி பிரிந்து வாழ்கின்றனர். இதனால், அதிருப்தி அடைந்த வீரபாண்டி, மைத்துனர் கண்ணனை கண்டித்தார். இந்நிலையில், கடந்த 06.06.2020ல் மருதாணிக்குளத்தில் சமரசம் பேசியபோது வீரபாண்டிக்கும், கண்ணனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது, துரைசிங்கம் வீரபாண்டியை பிடித்துக் கொள்ள, அவரை கண்ணன் அரிவாளால் வெட்டினார்.

இதில் படுகாயம் அடைந்த வீரபாண்டி திண்டுக்கல் அரசு மருத்துவமனையிலும், பின்னர் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி வீரபாண்டி பரிதாபமாக உயிரிழந்தார். திண்டுக்கல் மேற்கு காவல் நிலைய போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து, கண்ணன், துரைசிங்கத்தை கைது  செய்தனர். இந்த வழக்கு திண்டுக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நேற்று தீர்ப்பளித்த மாவட்ட முதன்மை நீதிபதி எம்.கே.ஜமுனா, ‘ கண்ணன் மற்றும் துரைசிங்கம் ஆகியோர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், இருவருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.10ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

Tags :
× RELATED மாமல்லபுரம் அருகே ₹4,276.44 கோடியில்...