×

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக 84வது பட்டமளிப்பு விழா தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்பு அமைச்சர்கள் புறக்கணிப்பு

சிதம்பரம், ஏப். 19: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 84வது பட்டமளிப்பு விழா நேற்று மாலை பல்கலைக்கழகத்தில் உள்ள சாஸ்திரி அரங்கத்தில் நடந்தது. பல்கலைக்கழகங்களின் வேந்தரும், தமிழ்நாடு கவர்னருமான ஆர்.என்.ரவி விழாவுக்கு தலைமை தாங்கி பட்டமளிப்பு விழாவை நடத்தினார். துணைவேந்தர் டாக்டர்.கதிரேசன் ஆண்டறிக்கை வாசித்தார். இஸ்ரோ முன்னாள் இயக்குநரும், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றத்தின் துணைத்தலைவருமான பத்மஸ்ரீ முனைவர் மயில்சாமி அண்ணாதுரை பங்கேற்று பட்டமளிப்பு விழா உரையாற்றினார். பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பு மற்றும் தங்கப்பதக்கம் பெற்ற 1,235 மாணவ, மாணவிகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி நேரடியாக பட்டங்களையும், பதக்கங்களையும் வழங்கினார். இதுபோல் பல்கலைக்கழகத்தில் நேரடியாகவும் தொலைதூரக்கல்வி வாயிலாகவும் படித்த ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 701 நபர்களுக்கு பட்டங்கள் வழங்கி தலைமை உரையாற்றினார்.தமிழக அரசின் உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன், கவர்னரின் செயலாளர் ஆனந்தராவ் பாட்டீல், கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளர் டாக்டர் சீத்தாராமன், கோட்டாட்சியர் ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.பட்டமளிப்பு விழாவையொட்டி விழுப்புரம் சரக டிஐஜி பாண்டியன், கடலூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி.சக்தி கணேசன் ஆகியோரது தலைமையில் பல்கலைக்கழக வளாகம் மற்றும் சிதம்பரம் நகரம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதற்கிடையே நேற்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பல்கலைக்கழகங்களின் இணைவேந்தரும், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சருமான டாக்டர் பொன்முடி, கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவரும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் பங்கேற்பார்கள் என அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால் அமைச்சர்கள் இருவரும் நேற்று நடந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கவில்லை.

Tags : Chidambaram Annamalai ,University ,84th Graduation Ceremony ,Tamil Nadu ,Governor ,Ravi ,Ministers ,
× RELATED சிதம்பரம் அண்ணாமலை...