விருதுநகர், ஏப். 12: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் மேகநாதரெட்டியிடம் ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் மனு அளித்தனர். அம்மனுவில், ‘2016 முதல் 2020 வரை கிராம ஊராட்சிகளில் தீர்மானத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்ட பணிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும். 14 மற்றும் 15 வது நிதிக்குழு மானியத்தில் செய்த பணிகளுக்கு பணப்பரிமாற்றம் செய்ய காலதாமதமாகி வருவதை சரி செய்ய வேண்டும்.
ஊராட்சிகளில் காலியாக உள்ள ஊராட்சி செயலர், தூய்மை பணியாளர், பம்ப் ஆப்ரேட்டர் காலிப்பணியிடங்களை ஊராட்சி சார்பில் நிரப்ப அனுமதி அளிக்க வேண்டும். ஊராட்சி பணியாளர்களுக்கு சம்பளம் வழங்க கணக்கு எண் 7 உருவாக்கப்பட்டு மாத ஊதியம் வழங்கப்பட்டு வரும் நிலையில், சில ஊராட்சிகளில் கணக்கு எண் 1ல் பழைய முறையில் ஊதியம் வழங்குவதை தவிர்த்து சம்பள கணக்கு எண் 7 அனைத்து ஊராட்சிகளிலும் மாத ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 10 கோரிக்கை அடங்கிய மனுவை அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.