திருப்பூர், ஏப்.12: பொதுமக்கள் உடனடியாக தகவல் அளிக்கும் வகையிலான ‘காவல் உதவி’ செயலியை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த வாரம் துவக்கி வைத்தார். இதையடுத்து அறுபது வகை சிறப்பம்சங்கள் அடங்கிய செயலி குறித்து டி.ஜி.பி. அறிமுகப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்த செயலியை பயன்படுத்துவது குறித்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அதன்படி, திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பாபு உத்தரவின் பேரில், ‘காவல் உதவி’ செயலியை பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில், பனியன் நிறுவன தொழிலாளர்களுக்கு அறிமுகப்படுத்தி மாநகர போலீசார் விழிப்புணர்வு செய்தனர். தொழில்நுட்ப பிரிவு எஸ்.ஐ.,மோகன், நுண்ணரிவு பிரிவு எஸ்.ஐ., விவேக்குமார் ஆகியோர் பனியன் தொழிலாளர்கள் 500 பேருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.