கோவை, ஏப்.12: கோவை மாவட்டத்தில் நேற்று பரவலாக மிதமான மழை பெய்தது. பல இடங்களில் வெயில் தாக்கம் குறைந்து குளுமையான சீதோஷ்ண நிலை காணப்பட்டது. புறநகர் பகுதியில் காற்றுடன் மழை பெய்தது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள இடங்களில் மழை அதிக நேரம் பெய்தது. கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், சிறுவாணி, சிறுமுகை பகுதிகளில் மழை பெய்ததால் நீர் தேக்கங்களுக்கு நீர் வரத்து அதிகரித்தது. மேலும் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் வாய்ப்பு இருப்பதாக வேளாண் வானிலைத்துறை தெரிவித்துள்ளது. மழையின் காரணமாக மண், காற்றின் ஈரப்பதம் அதிகரித்துள்ளது. வறட்சி நிலை மாறி வருகிறது என வேளாண் துறையினர் தெரிவித்தனர். வனப்பகுதியில் கடந்த 3 மாதமாக கடும் வறட்சி காணப்பட்டது. காடுகள் வெயில் தாக்கத்தால் தீப்பிடிக்கும் அபாயம் இருந்தது. மழையின் காரணமாக வனப்பகுதியின் வறட்சி நிலை மாறி விட்டது.