×

தாளவாடியில் கடையடைப்பு-ஆர்ப்பாட்டம்

சத்தியமங்கலம், ஏப்.12: திம்பம் மலைச்சாலையில் வாகன போக்குவரத்து குறித்து பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் இது சம்பந்தமாக தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு தாளவாடியில் நேற்று கடையடைப்பு மற்றும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் விவசாய உற்பத்திப் பொருட்களை எந்தவித நேரக் கட்டுப்பாடுமில்லாமல் கொண்டு செல்ல அனுமதிக்கவேண்டும். கர்நாடகா பகுதி, தாளவாடிப்பகுதி என பாகுபாடு காட்டாமல் அனைத்து பகுதி காய்கறிகள், விவசாய உற்பத்திப்பொருட்களையும் அனுமதிக்கவேண்டும்.

பேருந்து போக்குவரத்து தடையை நீக்கி நேரக்கட்டுப்பாடு இல்லாமல் அனுமதிக்க வேண்டும். காய்கறி மற்றும் விவசாயப்பொருட்கள் ஏற்றிச்செல்லும் வாகனத்திற்கு நுழைவுக்கட்டனம் வசூலிக்கக்கூடாது. அனைத்துப்  பொதுமக்களும் பாரபட்சமில்லாமல் எந்தவிதமான பாஸ் இல்லாமல் எந்நேரமும் பயணிக்க அனுமதிக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி தாளவாடி பஸ் நிலையம், மைசூர் சாலை, ஓசூர் சாலை, தலமலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 300க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி தாளவாடி விவசாய சங்க பிரதிநிதிகள் வாகன ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்கள் 100 க்கும் மேற்பட்டோர் தாளவாடி பஸ் நிலையத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags : Talawadi ,
× RELATED வீட்டிற்குள் புகுந்த புள்ளி மான்