திருவெறும்பூர், ஏப்.2: திருவெறும்பூரில் அரசு உதவி பெறும் பள்ளியில் படித்துவரும் மாணவன் திடீரென மாயமானார்.
தூத்துக்குடி மாவட்டம், வேம்பர் பகுதியை சேர்ந்தவர் ஜெயசீலன்-முருகேஸ்வரி தம்பதி மகன் பிரேம்குமார். இந்நிலையில் தம்பதியர் திருப்பூரில் தங்கி வேலை பார்த்தபோது திருவெறும்பூர் செல்வபுரத்தை சேர்ந்த தமிழரசி என்பவரும் அங்கு வேலை பார்த்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஜெயசீலன்-முருகேஸ்வரி பிழைப்புக்காக ஈரோடு சென்றுள்ளனர். அப்போது பிரேம்குமாரை தமிழரசியுடன் அனுப்பியதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் தமிழரசி, பிரேம்குமாரை தனது வீட்டில் வைத்து வளர்த்து வந்ததோடு திருவெறும்பூரில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் படிக்க படிக்க வைத்துள்ளார்.
தற்போது பிரேம்குமார் 8ம் வகுப்பு படித்து வருகிறான். இந்நிலையில் கடந்த 30ம் தேதி பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற பிரேம்குமார் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் இது குறித்து தமிழரசி திருவெறும்பூர் போலீசில் புகார் செய்துள்ளார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரேம்குமாரை தேடி வருகின்றனர்.