×

மாணவிகள் முகத்தில் பிறந்தநாள் கேக் பூசிய மாணவன் தட்டிக்கேட்ட பிடிஏ உறுப்பினர் மீது உறவினர்கள் தாக்குதல்

கெங்கவல்லி, ஏப். 2: கெங்கவல்லி அருகே, பிறந்தநாள் கொண்டாடிய மாணவன், மாணவிகள் முகத்தில் கேக் பூசியதை தட்டிக்கேட்ட பிடிஏ உறுப்பினரை, அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் போலீசார் முன்னிலையில் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அடுத்த கூடமலை அரசு மேல்நிலைப்பள்ளியில், 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை 450க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் பிளஸ்1 படிக்கும் மாணவன், கடந்த 30ம் தேதி தனது பிறந்தநாளை கூடமலை காளியம்மன் கோயிலில் கேக் வெட்டி கொண்டாடினார். அதில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள் முகத்தில் கேக்கை பூசியுள்ளார். இதை அவ்வழியாக வந்த பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர் பெரியசாமி பார்த்து, அவர்களை தட்டிக்கேட்டுள்ளார். இதையடுத்து மறுநாள் காலை பள்ளிக்கு வந்த மாணவனை அழைத்து விசாரித்த அவர், மாணவனை அடித்ததாக கூறப்படுகிறது. மாலையில் பள்ளி முடிந்து வீட்டுக்கு ெசன்ற மாணவன், நடந்த சம்பவம் குறித்து பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கெங்கவல்லி போலீஸ் ஸ்டேஷனில், மாணவனின் தாய் புகார் அளித்தார்.

மேலும், நேற்று காலை பள்ளிக்கு வந்த மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், தலைமை ஆசிரியர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராமச்சந்திரனை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, திடீரென பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர் பெரியசாமியை, மாணவனின் உறவினர் ஒருவர் கன்னத்தில் அறைந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து அங்கு விரைந்து வந்த போலீசார், இருதரப்பினரையும் சமாதானம் செய்தனர். மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், பெரியசாமியை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராமச்சந்திரன், பெரியசாமியை பதவியில் இருந்து நீக்கினார். தொடர்ந்து பெரியசாமியை அரைந்த மாணவனின் உறவினர், அவரிடம் மன்னிப்பு கேட்டார். இதையடுத்து இருதரப்பினரும் சமாதானமாக அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இதனால் அரசு பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டது.


Tags : Relatives ,PDA ,
× RELATED குடும்பத்துடன் சுற்றுலா சென்றபோது...