பேரணாம்பட்டு, மார்ச் 31: பேரணாம்பட்டு ஆதிதிராவிட நல மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடந்தது.
வேலூர் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, பேரணாம்பட்டு வட்டார வள மையம் சார்பில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் ஆதிதிராவிட நல மேல்நிலைப் பள்ளியில் நடைப்பெற்றது. இம்முகாமில் 1 வயது முதல் 18 வயதுடைய மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் தேசிய அடையாள அட்டை, மதிப்பீட்டின் அடிப்படையில் உதவி உபகரணங்கள், இலவச அறுவை சிகிச்சை, கல்வி உதவித்தொகை, இலவச பேருந்து தேசிய அடையாள அட்டை போன்றவற்றிற்கு பரிந்துரைக்கப்பட்டது.
முகாமை பேரணாம்பட்டு நகர மன்றத்தலைவர் வெ.பிரேமா வெற்றிவேல் மருத்துவர்கள் பரிந்துரைத்த சான்றுகளை மாணவர்களுக்கு வழங்கி முகாமை தொடங்கி வைத்தார். இதில் பேரணாம்பட்டு வட்டாரக் கல்வி அலுவலர்கள் இளவரசன், விஜயலட்சுமி, பேரணாம்பட்டு வட்டார மேற்பார்வையாளர் கண்ணதாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மருத்துவர்கள் செந்தில்குமார், தனஞ்செயன், பாபு, புகழரசி ஆகியோர் கொண்ட மருத்துவ குழுவினர் 198 மாற்றுத்திறனாளி மாணவர்களை மருத்துவ ஆய்வு செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை வட்டார வள மேற்பார்வையாளர் கண்ணதாசன் தலைமையிலான குழுவினர் நாகராஜ், மோனிஷ், சுரேஷ், மஞ்சுளா, மேரி ஆகியோர் செய்திருந்தனர்.