×

பண்ருட்டி அருகே சோகம் குளத்தில் மூழ்கி 2 தொழிலாளர்கள் பலி

பண்ருட்டி, மார்ச் 31: பண்ருட்டி அருகே குளத்தில் மூழ்கி 2 தொழிலாளர்கள் பலியான சம்பவம் அக்கிராமத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பண்ருட்டி அருகே கருக்கை கிராமத்தை சேர்ந்தவர்கள் சந்தானம் மகன் ரத்தினவேல் (43). கலியபெருமாள் மகன் திருநாவுக்கரசு (40). இவர்கள் இருவரும் கூலி வேலை செய்து வந்தனர். இவர்கள் இருவருக்கும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் ரத்தினவேல், திருநாவுக்கரசு ஆகிய இருவரும் நேற்று முன்தினம் மதியம் வேலையை முடித்துவிட்டு அக்கிராமத்தில் உள்ள சாமியார்குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக இருவரும் தண்ணீரில் மூழ்கி சேற்றுக்குள் சிக்கிக்கொண்டனர். இதில் மூச்சுத்திணறி இருவரும் பரிதாபமாக இறந்தனர்.இந்நிலையில் மாலையில் அவர்கள் வீடு திரும்பாததால் உறவினர்கள் சந்தேகம் அடைந்தனர். தொடர்ந்து சாமியார்குளத்தில் தேடிப்பார்த்தபோது இருவர் உடலும் தண்ணீரில் மிதந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காடாம்புலியூர் இன்ஸ்பெக்டர் ராஜதாமரைபாண்டியன் இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

Tags : Panruti ,
× RELATED பண்ருட்டியில் அடுத்த எஸ். ஏரி பாளையம். கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு