×

பிரபல ரவுடியின் கூட்டாளிகள் துப்பாக்கி முனையில் 8 பேர் கைது: பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்

ஸ்ரீபெரும்புதூர்,  மார்ச் 26: தாம்பரம் அருகே பிரபல ரவுடியின் கூட்டாளிகள் 8 பேர், துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டனர். தாம்பரம் அருகே நடுவீரப்பட்டு பகுதியை சேர்ந்தவர் லெனின் (36). பிரபல ரவுடி.  சரித்திர பதிவேடு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர். இவர் மீது கொலை, கொள்ளை, கொலை முயற்சி, கொலை மிரட்டல், ஆள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளின் கீழ், கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும், இவன் மீது குண்டர் தடுப்பு சட்டமும் போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், நடுவீரபட்டு லெனின் வீட்டில் சிலர் பதுங்கி, சதி திட்டம் தீட்டுவதாக, சோமங்கலம் போலீசாருக்கு   ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார், நேற்று முன்தினம் நள்ளிரவில், சம்பவ இடத்துக்கு சென்று கண்காணித்தனர். அப்போது, அங்கு சிலர் பதுங்கி இருப்பது தெரிந்தது. உடனே போலீசார், அந்த வீட்டில் அதிரடியாக நுழைந்து, அங்கிருந்த 8 பேரை, துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்தனர். அவர்களிடம் இருந்து கத்தி, வீச்சரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யபட்டன. பின்னர் அவர்களை, காவல் நிலையம் ெகாண்டு சென்று விசாரித்தனர்.

அதில், பிரபல ரவுடி லெனின் கூட்டாளிகளான நடுவீரப்பட்டு  பகுதியை சார்ந்த நரேஷ்பாபு (26), சுரேஷ்பாபு (30), விக்னேஷ் (23), ஹரிகரன்  (21), சென்னை டிபி சத்திரம் ஸ்ரீதரன் (24), மோகன் (24), ஜாபர்கான்பேட்டை  விக்னேஷ் (18), பொத்தேரி சந்துரு (27) ஆகியோர் என தெரிந்தது. அவர்கள் மீது சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்பட பல்வேறு மாவட்ட காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, ஆள்கடத்தல், வழிப்பறி உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது தெரிந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : Famous Rowdy ,
× RELATED மைத்துனி வீட்டில் பதுங்கி இருந்த போது பிரபல ரவுடி பினு மீண்டும் கைது