×

அரியலூர் மாவட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டம்

அரியலூர், மார்ச் 26: அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி, நடைபெற்றது.தமிழ்நாடு முதலமைச்சர் ஆதிதிராவிடர் மற்றம் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அரியலூர் மாவட்டத்திற்கு ஆதிதிராவிடர் துணைத் திட்டத்தின்கீழ் பல்வேறு செயலாக்க துறைகள் மூலம் திட்டங்களின் செயல்பாட்டை மாவட்ட அளவில் அலுவலர்களை கொண்டு கண்காணிக்க குழு நியமனம் செய்து ஆணையிடப்பட்டுள்ளது.இந்த கண்காணிப்பு குழுவினர் அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வருகை தந்து, மாவட்ட கலெக்டர் தலைமையில் அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டனர். இக்குழுவினர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, மாவட்ட பஞ்சாயத்து, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, தாட்கோ, ஆதிதிராவிடர் நலத்துறை, வேளாண்மைத்துறை, வேளாண் பொறியியல் துறை, தோட்டக்கலைத்துறை, மீன்வளத்துறை, கால்நடை பராமரிப்புத் துறை, வருவாய்த்துறை, மகளிர் திட்டம், மாவட்ட தொழில் மையம், மக்கள் நல்வாழ்வுத் துறை, மாவட்ட சமூக நலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் ஆகிய துறைகளில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலனுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்கள், ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகைகள், செலவு செய்யப்பட்ட விபரம், பயனடைந்த பயனாளிகளின் எண்ணிக்கை உள்ளிட்ட பல்வேறு தகவல்களை அரியலூர் மாவட்டத்தில் ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கையாக அளிக்க உள்ளார்கள்.

அரியலூர் மாவட்டத்தில் மேற்கண்ட துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த விபரங்களை கண்காணிப்பு குழுவினர்கள் ஆய்வு செய்ய வரும்போது ஒவ்வொரு குழுக்களுக்கும் நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பு அலுவலர்கள் உடன் செல்வதுடன், சம்மந்தப்பட்ட துறையினர் கண்காணிப்பு குழுவிடம் தகவல்களை உரிய முறையில் வழங்கி, ஆய்வுகளுக்கு முழு ஒத்துழைப்பினை சம்மந்தப்பட்ட அலுவலர்கள் வழங்க வேண்டும் எனவும் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை இணை ஆணையர் கருணாகரன், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்னுலாப்தீன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத்திட்ட இயக்குநர் சுந்தர்ராஜன், மகளிர் திட்ட இயக்குநர் சிவக்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Tags : Ariyalur ,District ,Adithravidar ,
× RELATED அரியலூர் மாவட்டம் நின்னியூர் காலனி...