×

தங்கையை காப்பாற்ற நினைத்ததால் வெளியான பகீர் தகவல் மகளுக்கு பாலியல் தொல்லை; போக்சோவில் தந்தை கைது

* 5 ஆண்டாக அரங்கேறிய கொடூரம்
* உடந்தையான தாய் மீதும் வழக்கு

சென்னை: மகளுக்கு 5 ஆண்டாக பாலியல் தொல்லை கொடுத்து வந்த தந்தை போக்சோவில் கைது செய்யப்பட்டார். இதற்கு உடந்தையாக இருந்த சிறுமியின் தாய் மீதும் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் பூப்பெய்திய தன் தங்கையும் தந்தையால் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக இந்த உண்மையை பாதிக்கப்பட்ட சிறுமி ஆசிரியரிடம் கூறியுள்ளார் என்ற வேதனையான தகவல் வெளியாகி உள்ளது.சென்னை பெரம்பூர் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி, அதே பகுதியில் உள்ள பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமி, கடந்த 3 மாதங்களாக வகுப்பறையில் மிகவும் சோர்வுடன் இருந்துள்ளார். இதனால், ஆசிரியர் ஒருவர் இந்த சிறுமியை அழைத்து விசாரித்துள்ளார். முதலில் பதில் கூற தயங்கிய சிறுமி, பிறகு அழுதபடி, ‘‘எனது தந்தை தினமும் இரவில் பாலியல்  தொந்தரவு செய்கிறார்,’’ என கூறியுள்ளார்.

இதை கேட்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியர், உடனடியாக குழந்தைகள் நல அலுவலரிடம் தெரிவித்துள்ளார். அதன்பேரில், குழந்தைகள் நல அலுவலர், பாதிக்கப்பட்ட சிறுமியிடம் விசாரித்து, பின்னர் இதுபற்றி பெரவள்ளூர் அனைத்து மகளிர் காவல்  நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் சிறுமியின் தந்தை பாலாஜி ஷா (45) என்பவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது. இதுபற்றி போலீசார் கூறியதாவது: பாலாஜி ஷாவுக்கு கடந்த 2004ம் ஆண்டு திருமணமாகி, 16 மற்றும் 12 வயதில் 2 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகளான 16 வயது சிறுமிக்கு 11 வயதில் இருந்தே அவரது தந்தை பாலியல் தொந்தரவு செய்துள்ளார். குறிப்பாக, நள்ளிரவில் பாலியல் தொந்தரவு செய்து வந்துள்ளார். இதுபற்றி தனது தாயிடம் சிறுமி கூறியுள்ளார். அப்போது அவர், கணவன் பாலாஜி ஷாவை துடைப்பத்தால் அடித்துவிட்டு, இனி இதுபோன்று செய்தால் போலீசில் பிடித்துக் கொடுத்து விடுவேன் என எச்சரித்துள்ளார்.

ஆனாலும், தந்தையின் பாலியல் தொந்தரவு தொடர்ந்துள்ளது. இதுபற்றி வெளியில் சொல்ல முடியாமல் சிறுமி தவித்து வந்துள்ளார். இதனிடையே, பாதிக்கப்பட்ட சிறுமியின் தங்கை கடந்த 3 மாதங்களுக்கு முன், பூப்படைந்துள்ளார். எனவே, தனக்கு நேர்ந்த கொடுமை, தனது தங்கைக்கும் ஏற்பட கூடாது என கருதிய சிறுமி, பள்ளி ஆசிரியரிடம் இதுபற்றி கூறியதும் தெரியவந்தது.  இதையடுத்து, பாலாஜி ஷா மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மகளுக்கு நடந்த கொடுமையை போலீசாரிடம் தெரிவிக்காமல் மறைத்த குற்றத்திற்காக, சிறுமியின் தாய் மீதும் போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பெற்ற மகளையே 5 வருடங்களாக பாலியல் தொல்லை கொடுத்து வந்த தந்தை, போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Pakir ,Pokmon ,
× RELATED மாணவிக்கு பாலியல் தொல்லை போக்சோவில் வாலிபர் கைது