×

தூத்துக்குடி ஜிஹெச்சுக்கு ஆம்புலன்ஸ்கள் தடையின்றி செல்வதற்கான வழித்தடங்கள் மேயர் ஜெகன்பெரியசாமி ஆய்வு

தூத்துக்குடி, மார்ச் 24: தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ்கள் தடையின்றி வந்து செல்வதற்கான வழித்தடங்களை மேயர் ஜெகன்பெரியசாமி ஆய்வு செய்தார். தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நுழைவு வாயிலில் இருந்து மருத்துவமனைக்கு உள்ளே ஆம்புலன்ஸ் வாகனங்கள் வந்து செல்வதில் சிக்கல் நிலவி வந்தது. மருத்துவமனை வளாகத்தில் ஆங்காங்கே நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களால் மருத்துவமனைக்கு வந்து செல்லும் நோயாளிகள், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தனர். இதுதொடர்பான புகார்களை அடுத்து மேயர் ஜெகன்பெரியசாமி, மருத்துவமனை வளாகத்தை மாநகராட்சி அதிகாரிகள் குழுவினருடன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் நேரு, உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெபமணி, மாநகர போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் மயிலேறும்பெருமாள், எஸ்ஐ வெங்கடேஷ் ஆகியோருடன் மருத்துவமனை உள்ளே ஆம்புலன்ஸ்கள் தடையின்றி வந்து செல்வது குறித்து  மேயர் ஜெகன்பெரியசாமி ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து மருத்துவமனை வளாகத்தில் போக்குவரத்திற்கு இடையூறாக ஆங்காங்கே இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டு அவ்வாகனங்களை மாற்று இடத்தில் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும் பாளை. ரோடு விவிடி சிக்னல் சந்திப்பில் இருந்து மருத்துவமனை பிரதான நுழைவு வாயில் வழியாகவும் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் வருவதற்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்டு புழக்கத்தில் இல்லாமல் இருந்த வழித்தடம் ஆகியவையும் புதுப்பிக்கப்பட்டு இந்த 2 வழித்தடங்கள் வழியாகவும் ஆம்புலன்ஸ்கள் எந்த நேரமும் தடையின்றி வந்து செல்ல ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது.
அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அவசர கால ஆம்புலன்ஸ்கள் தடையின்றி வந்து செல்வதற்கு துரித நடவடிக்கை எடுத்த மேயர் ஜெகன்பெரியசாமிக்கு நோயாளிகள், பொதுமக்கள், சமூகஆர்வலர்கள் உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Tags : Mayor ,Jaganperiyasamy ,Thoothukudi GHC ,
× RELATED கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி வீட்டில் வருமான வரித்துறை சோதனை..!!