ஊட்டி, மார்ச் 24: கோத்தகிரி ஊராட்சி கொட்டக்கம்பை அங்கன்வாடி மையத்தில் மாவட்ட கலெக்டர் அம்ரித் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பணியாற்றி வரும் அங்கன்வாடி பணியாளர்கள் குழந்தைகளுக்கு முன்பருவக்கல்வியை வழங்கி வருகின்றனர். கர்ப்பிணி தாய்மார்களுக்கு சத்தான உணவு வகைகள் குறித்து ஆலோசனைகளையும் வழங்கி, குழந்தைகளின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி வருகின்றனர். அங்கன்வாடிகளில் பயிலும் குழந்தைகளுக்கு மாதந்தோறும் எடை மற்றும் உயரம் அளவிடுதல், ஊட்டச்சத்து நிலை குறித்தும் அங்கன்வாடி பணியாளர்கள் கணக்கெடுப்பு செய்து வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் அங்கன்வாடி பணியாளர்களின் பணி சிறப்பாக நடைபெற்று வருவதை உறுதி செய்யும் வகையில் மாவட்ட கலெக்டர் அம்ரித், கோத்தகிரி ஊராட்சி கொட்டக்கம்பை அங்கன்வாடி மையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளின் வருகை பதிவேடு மற்றும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு வகைகள் அட்டவணை படி வழங்கப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்தார். குழந்தைகளின் உயரம் மற்றும் எடையினை பார்வையிட்டும், சமையலறை தூய்மையாக இருப்பதையும், அரிசி, ஊட்டசத்து சத்துமாவு, முட்டை, சமையல் எண்ணெய் ஆகியவை இருப்பு உள்ளதையும் உறுதி செய்தார்.