×

ஆரல். மாஜி ராணுவ வீரர் வீட்டில் கார் திருட்டு கண்காணிப்பு கேமராக்கள், கைரேகை பதிவுகள் ஆய்வு

ஆரல்வாய்மொழி, மார்ச் 24:ஆரல்வாய்மொழி நடராஜன் நகர் பகுதியை சேர்ந்தவர் அழகப்பன் பிள்ளை (73). ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவரது மகள் சென்னையில் குடும்பத்துடன் உள்ளார். கடந்த 21ம் தேதி அழகப்பன் பிள்ளையும், மனைவி அழகம்மாளும் சென்னையில் வசிக்கும் தனது மகள் வீட்டிற்கு  புறப்பட்டு சென்றனர். மறுநாள் காலை இவர்களது வீடு உடைக்கப்பட்டு கிடந்தது. வீட்டு முன் நின்ற காரை காணவில்லை. வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் பெரிய அளவில் பணம், நகை இல்லாததால் பூஜை அறையில் இருந்த கார் சாவியை எடுத்து காரை திருடி சென்றனர். இந்த சம்பவம் குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சம்பவம் நடந்த பகுதியில் இருந்து ஆரல்வாய்மொழி சோதனை சாவடி வரை உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.  மேலும் பழைய கார் வாங்கி விற்பனை செய்யும் நபர்களையும் ரகசியமாக கண்காணித்து வருகிறார்கள். சந்தேகப்படும்படியான கார் ஆரல்வாய்மொழி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நின்றால் உடனடியாக தகவல் தெரிவிக்கும்படி போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

குமரி மாவட்டத்தில் சமீப காலமாக ஆள் இல்லாத வீடுகளை நோட்டமிட்டு திருட்டு  கும்பல் கைவரிசை காட்டி வருகிறது. இரணியல் அருகே காரங்காடு அடுத்த  நுள்ளிவிளையை சேர்ந்த கிராம நிர்வாக அதிகாரி சோபி (47), கடந்த இரு  நாட்களுக்கு முன் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்று  விட்டார். பின்னர் திரும்பி வந்தபோது, வீட்டின் பின்பக்க கதவு  உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 2 பவுன் தங்க வளையல், 31 கிராம் எடை கொண்ட  இரண்டு நெக்லஸ், 2 பவுன் எடையில் 4 ஜோடி கம்மல், 2 கிராம் செயின் ஆகியவற்றை  மர்ம நபர்கள் திருடி சென்று இருந்தனர். இது போல் இரணியல் அருகே குருந்தன்கோடு பொட்டல்குளம் பகுதியை சேர்ந்த டெல்பின் மேரி என்பவர்,  குழந்தைக்கு உடல் நலம் சரியில்லாததால் வீட்டை பூட்டி விட்டு ஆசாரிப்பள்ளம்  அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்று விட்டார். திரும்பி வந்த  போது வீட்டில் பீரோவை உடைத்து மர்ம நபர்கள் தங்க நகைகளை திருடி  சென்றிருந்தனர். இந்த சம்பவங்கள் ெதாடர்பாக இரணியல் போலீசார் விசாரணை  நடத்தி வருகிறார்கள்.  
இந்த சம்பவங்களில் கொள்ளையர்களின் ைகரேகைகள் சிக்கி உள்ளன. அதன்  அடிப்படையில் விசாரணை நடந்து வருகிறது.

Tags : Aral ,
× RELATED ஆரல்வாய்மொழியில் மலை மேல் உள்ள முருகன் கோயிலில் சிக்கிய 40 பக்தர்கள்