×

மன்னார்குடி அருகே எடமேலையூரில் உலக தண்ணீர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

மன்னார்குடி, மார்ச் 23: தண்ணீரின் அவசியத்தை வலியுறுத்தி 1993ம் ஆண்டு நடந்த சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சிக்கான ஐக்கிய நாட்டு சபை மாநாட்டில் மார்ச் 22ம் தேதி உலக தண்ணீர் தினமாக கடைபிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. நீர் வளத்தைக் காப்பதும், அதனை பெருக்குவது குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதும் உலக தண்ணீர் தினத்தின் நோக்கமாகும்.இந்த நிலையில், வெண்ணாறு வடிநில கோட்டம் நீர்வள துறை சார்பில் தமிழ்நாடு பாசன மேலாண்மை நவீன படுத்துதல் திட்டத்தின் கீழ் காவிரி டெல்டா உப வடிநிலப்பகுதி மாதிரி கிராமமாக தேர்வு செய்யப்பட்டுள்ள எடமேலையூர் 2ல் உலக தண்ணீர் தினத்தையொட்டி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.நிகழ்ச்சிக்கு, உதவி பொறியாளர் ரவீந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர் அன்பழகன், வேளாண் பொறியியல் துறை இளநிலை பொறியாளர் சண்முகம், கால்நடைத்துறை மருத்துவர் ஜெயபால், ஊராட்சி மன்ற தலைவர் ஜெயா பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

இதில், வெண்ணாறு வடிநில கோட்ட உதவி செயற்பொறியாளர் மொக்க மாயன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்து பேசுகையில், நாம் அன்றாடம் செய்யும் சிறுசிறு வேலைகளும் தண்ணீர் சேமிப்புக்கு வழி வகுக்கும். உதாரணமாக, பல் துலக்கும் போது குழாயை அடைத்துவிட்டு பல் துலக்கலாம். இதன்மூலம் நிமிடத்திற்கு 6 லிட்டர் தண்ணீரை சேமிக்க முடி யும், தண்ணீர் குழாயை பயன்படுத்தி முடித்த பிறகு மறக்காமல் குழாயை அடைப்பதும் வீணாக திறந்திருக்கும் குழாய்களை பார்த்தால் அதை அடைப்பதும் தண்ணீர் சேமிப்பிற்கு வழிவகுக்கும்.

தண்ணீர் தொட்டிக்கு மோட்டார் மூலம் தண்ணீர் ஏற்றும்போது தண்ணீர் நிரம்பி வீணாகாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். புதியதாக வீடு மழைநீர் சேகரிப்பு தொட்டியையும் சேர்த்து கட்டுவதன் மூலம் நீர் வீணாகாமல் பார்த்து கொள்வதோடு சேமிக்கவும் முடியும்.உலக தண்ணீர் தினத்தை ஒரு நாளாக மட்டும் கடைபிடிக்காமல் ஒவ்வொரு நாளும் தண்ணீரின் தேவையையும், சிக்கனத்தையும் மனதில் வைத்தே செயல்பட வேண்டும். எனவே தண்ணீரின் அவசியத்தை உணர்ந்து ஒவ்வொரு துளி தண்ணீரையும் காப்பது நம் தலையாய கடமை என்றார்.

Tags : World Water Day Awareness ,Edamelayur ,Mannargudi ,
× RELATED ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த...