×

தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறையை குறைக்க அரசு ஒவ்வொரு துறையிலும் சிறப்பான திட்டங்களை வகுத்து செயல்படுகிறது: சட்டப்பேரவையில் எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் பேச்சு

சென்னை: தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறையை குறைக்க அரசு ஒவ்வொரு துறைக்கும் சிறப்பான திட்டங்களை வகுத்து செயல்பட்டு வருவதாக சட்டப்பேரவையில் திமுக பெண் எம்எல்ஏ வரலட்சுமி கூறினார்.தமிழக சட்டப்பேரவையில் நேற்று 2022 - 2023ம் ஆண்டுக்கான பொது மற்றும் வேளாண் பட்ஜெட்டுகள் மீதான 2வது நாள் விவாதத்தில் செங்கல்பட்டு எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் (திமுக) பேசியதாவது:தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் முதல்முறையாக கணினி முறையில் தொடர்ந்து 2வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்ததன் மூலம், விவசாயிகளுக்கு மணிமகுடம் சூட்டியுள்ள உண்மையான தமிழரின் அடையாளம் என்ற பெருமையை இந்த அரசு பெற்றுள்ளது. 2014ம் ஆண்டு முதல் வருவாய் பற்றாக்குறை அச்சுறுத்தும் வகையில் ஆண்டுதோறும் மதிப்பீட்டு வந்த நிலையில், முதன்முறையாக அந்த நிலை மாற்றப்பட்டு இந்தாண்டு ₹7 ஆயிரம் கோடி, தமிழ்நாட்டுக்கு வருவாய் பற்றாக்குறை குறைந்துள்ள செய்தி அரசின் நிர்வாக திறமையை வெளிக்காட்டுகிறது. இப்படி, ஒவ்வொரு துறைக்கும் திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருவதாக அரசை மக்கள் பாராட்டி வருகிறார்கள்.

உயர்க் கல்வியில் சேரும் மாணவ - மாணவிகளுக்கு மாதம் ₹1000 மற்றும் ஐஐடி, எய்ம்ஸ் உள்ளிட்ட உயர் கல்வியில் சேரும் அரசு பள்ளி மாணவர்களுக்கு முழு செலவும் அரசே ஏற்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட திருக்கோயில்களை, அவற்றின் பழமை மாறாமல் புதுப்பித்து புனரமைக்க ₹100 கோடி ஒதுக்கியது, வெள்ளம் ஏற்படும் காலங்களில் மக்களை பாதுகாக்க தரைபாலங்களை உயர்மட்ட பாலங்களாக மாற்ற ₹1000 கோடி உள்ளிட்ட திட்டங்களை பொதுமக்கள் வரவேற்கிறார்கள்.ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு இலவசமாக தென்னங்கன்றுகள் மற்றும் தோட்டக்கலை துறை மூலம் செடிகள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும் என்ற அறிவிப்பு, பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் மூலம், 18 ஆயிரம் புதிய வகுப்பறைகள் கட்டப்படும் என்ற அறிவிப்பு வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் அரசு பள்ளிகளில் கணினி ஆய்வகங்கள் உருவாக்க இந்த நிதியாண்டில் ₹1,300 கோடி ஒதுக்கியதுடன், அடுத்த 5 ஆண்டுகளில் இத்திட்டத்தை படிப்பாக ₹7 ஆயிரம் கோடி செலவில் செயல்படுத்தப்படும் என்ற செய்தி மாணவர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறைக்கு இந்தாண்டு ₹17,901.73 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, தமிழகத்தில் மருத்துவ துறையை இமயத்தின் உச்சிக்கு கொண்டுசென்ற பெருமை முதல்வர் மு.க.ஸ்டாலினையே சாரும். செங்கல்பட்டு மாவட்டம், ஆத்தூரில் ₹27 கோடி மதிப்பீட்டில் சமூக மேம்பாட்டிற்கான ஒருங்கிணைந்த பயிற்சி அமைக்கப்படும் என்ற அறிவிப்பிற்கு தொகுதி மக்கள் சார்பாக மனமார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறேன். அதேபோல், சிங்கபெருமாள்கோவில் - ஒரகடம் இடையே, கடந்த 10 ஆண்டுகளாக சாலை பணி நடைபெறாமல் கிடப்பில் இருந்தது. அந்த சாலை பணியை தற்போது முதலமைச்சர் தொடங்கி, அங்கு மேம்பாலம் கட்டும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளதற்கும் நன்றி. இவ்வாறு அவர் பேசினார்.


Tags : Tamil Nadu ,MLA ,Varalakshmi Madhusoodanan ,Legislative Assembly ,
× RELATED பிறந்தநாள் வாழ்த்து கூறிய...