×

தாட்கோவில் மின்மோட்டார் அரசு மானியம் பெற அழைப்பு

சிவகங்கை, மார்ச் 19: கலெக்டர் மதுசூதன்ரெட்டி தகவல்:தமிழக அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை (தாட்கோ) மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு பி.வி.சி பைப் வாங்க, ரூ.15 ஆயிரம் மானியமாகவும், புதிய மின் மோட்டார் வாங்க, ரூ.10 ஆயிரம் மானியமாகவும் வழங்கப்படுகிறது. விண்ணப்பதாரர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினராக இருக்க வேண்டும்.

 குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு மேல் இருக்ககூடாது. விவசாயத்தை தொழிலாக கொண்டவராக இருக்க வேண்டும். தாட்கோ மானிய திட்டத்தில் பயன்பெறாத விவசாயிகளுக்கும், சிறு, குறு மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கும், துரித மின் இணைப்பு திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து நிலுவையில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
ஏற்கனவே, தாட்கோ நிலம் வாங்கும் திட்டம், நில மேம்பாட்டு திட்டம் மற்றும் துரித மின் இணைப்பு திட்டம் ஆகிய திட்டங்களில் பயன்பெற்றிருந்தாலும் இத்திட்டத்தில் பயன்பெறலாம்.

மின் மோட்டார் மானியம் பெற்றவர்கள், வேளாண், தோட்டக்கலைத்துறை திட்டங்களில் மின் மோட்டார் மானியம் பெற்றவர்கள். இத்திட்டத்தின் கீழ் மானியம் பெற முடியாது. சாதி சான்று, வருமான சான்று, குடும்ப அட்டை, இருப்பிட சான்று, சிட்டா, பட்டா, அடங்கல், அ-பதிவேடு, புலப்பட வரைபடம், அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட விலைப்புள்ளி ஆகியவற்றை www.application.tahdco.com  என்ற தாட்கோ இணையதள முகவயில், பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு, சிவகங்கையில் உள்ள தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags : Tadco ,
× RELATED தாட்கோ மூலம் 2023-24ம் ஆண்டில் பொருளாதார...