அலங்காநல்லூர், மார்ச் 19: அழகர்கோவிலில் திருக்கல்யாண உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது. அழகர்கோவிலில் பங்குனி திருவிழா கடந்த 15ம் தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று கள்ளழகர் என்கின்ற சுந்தரராஜ பெருமாள் காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினார். கள்ளழகர் என்ற சுந்தரராஜ பெருமாளுக்கும் தேவி, பூமிதேவி, கல்யாண சுந்தரவள்ளி தாயார், ஆண்டாள் ஆகிய 4 பிராட்டிமார்களுக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். நேற்று இரவு அனைவரும் ஒரே சப்பரத்தில் புறப்பாடாகி சன்னதியில் எழுந்தருளி சேவை சாதித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று 5ம் திருநாள் நிகழ்ச்சியாக சுந்தரராஜ பெருமாள், தேவி, பூமிதேவி, கல்யாண சுந்தரவள்ளி தாயார், ஆண்டாள் ஆகிய நான்கு பிராட்டிமார்களுடன் சன்னதியில் சேர்த்தி திருமஞ்சனம் நடைபெறுகிறது. மாலையில் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி மஞ்சள் நீர் சாற்று முறை நடைபெறுகிறது. இத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாஜலம், கோவில் துணை ஆணையர் அனிதா மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.