×

டி.கல்லுப்பட்டி 10வது வார்டு தேர்தல் விவகாரம் முடிவு மாற்றப்பட்டது குறித்து காரணம் தெரிவிக்க வேண்டும் தேர்தல் அதிகாரிக்கு ஐகோர்ட் உத்தரவு

மதுரை , மார்ச் 19: மதுரை மாவட்டம், டி.கல்லுபட்டி பேரூராட்சிக்கு நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த மாதம் 22ம் தேதி எண்ணப்பட்டன. பேரூராட்சியின் 10வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட சுப்புலட்சுமியும், சுயேச்சையாக போட்டியிட்ட பழனிச்செல்வியும் தலா 284 வாக்குகளை பெற்றனர். இதனால் குலுக்கல் மூலம் வார்டு உறுப்பினர் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் பழனிச்செல்வி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில், திடீரென திமுக வேட்பாளர் சுப்புலட்சுமி வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார்.

இதுசம்பந்தமாக தேர்தல் அதிகாரி பிறப்பித்த அறிவிப்பை ரத்து செய்து தன்னை வெற்றி பெற்றவராக அறிவிக்க கோரி பழனிச்செல்வி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், தேர்தல் அதிகாரியை சஸ்பெண்ட் செய்துள்ளதாகவும், திமுக வேட்பாளரை வெற்றி பெற்றதாக அறிவித்த உத்தரவு திரும்பப் பெறப்பட்டு, டி.கல்லுபட்டி பேரூராட்சி 10வது வார்டு கவுன்சிலராக மனுதாரர் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் அதிகாரி தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதில், பணி அழுத்தம் காரணமாக தவறுதலாக திமுக வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவித்து விட்டதாக கூறப்பட்டுள்ளது. இதைக்கேட்ட நீதிபதிகள், தேர்தல் முடிவை மாற்றி அறிவிக்க காரணம் என்ன என்பது குறித்த உண்மைகளை விளக்கி புதிதாக மனுதாக்கல் செய்ய வேண்டும் என்று தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிட்டு விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.

Tags : D.Kallupatti ,10th Ward Election ,Returning Officer ,
× RELATED தேர்தல் அதிகாரி தகவல் வாக்காளர்களை...