குஜிலியம்பாறை, மார்ச் 19: குஜிலியம்பாறை அருகே ராமகிரியில் உள்ள கல்யாண நரசிங்க பெருமாள் கோயில் பங்குனி மாத தேரோட்ட திருவிழா மார்ச் 11ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று முன்தினம் இரவு நரசிங்க பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, கமலவள்ளி தாயார் தெய்வங்களுக்கு திருக்கல்யாணம் மகா உற்சவ விழா சிறப்பாக நடந்தது. இதில் மாலை மாற்றுதல், தேங்காய் உருட்டுதல், திருமாளுக்கு மொய் எழுதுவது நிகழ்வுகள் நடந்தது.
தொடர்ந்து பூந்தேர் வாகனத்தில் சுவாமி வீதி உலா வந்தது. இதில் கோயில் திருப்பணி கமிட்டி தலைவர் கருப்பண்ணன், செயல் அலுவலர் ஜெயசெல்வம் மற்றும் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று மார்ச் 19 காலை 9 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.