×

குற்றப்பத்திரிகை வழங்க லஞ்சம் எஸ்.எஸ்.ஐ.க்கு 2 ஆண்டு சிறை

சென்னை: லஞ்சம் பெற்ற வழக்கில் மயிலாப்பூர் சிறப்பு உதவி ஆய்வாளருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2012ம் ஆண்டு 48 லட்ச ரூபாய் பெற்று மோசடி செய்ததாக ரமேஷ் என்பவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை மயிலாப்பூரை சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவர் மயிலாப்பூர் குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்தார். இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

 இதன்பிறகு சைதாப்பேட்டை நீதிமன்ற உத்தரவின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்தனர். அப்போது, மயிலாப்பூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் செல்லத்துரையை புகார் கொடுத்த சுந்தரமூர்த்தி அணுகி அசல் ஆவணங்களை திரும்ப ஒப்படைக்குமாறு கோரியுள்ளார். அதற்கு செல்லத்துரை 4 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.

இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு காவல்துறையில் சுந்தரமூர்த்தி புகார் செய்ததன் அடிப்படையில், சிறப்பு உதவி  ஆய்வாளர் கையும் களவுமாக பிடிபட்டு கைது செய்யப்பட்டார். அவர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.  இந்த வழக்கை சென்னை லஞ்ச ஒழிப்பு தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்ற நீதிபதி ஓம்பிரகாஷ் விசாரித்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, லஞ்சம் பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளர் செல்லத்துரை மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், 2 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது என்று தீர்ப்பளித்தார்.

Tags : SSI ,
× RELATED எஸ்எஸ்ஐயை தாக்க முயன்ற ரவுடி கைது