கமுதி, மார்ச் 15: கமுதி அருகே அபிராமத்தில் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் அனைத்து மகளிர் நல்வாழ்வு மையம் சார்பில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. மையத்தின் தலைவி மீனலோசனி வரவேற்றார். அபிராமம் பேரூராட்சி தலைவர் பாத்திமாகனி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக திமுக நகர செயலாளர் ஜாகிர் உசேன், தலைமையாசிரியைகள் அமுதா, லதா, தமிழ்ச்செல்வி ஆகியோர் கலந்து கொண்டனர். 200க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் சீருடை வழங்கப்பட்டது.
ஓய்வுபெற்ற செயல் அலுவலர் ஜெகதீசன் பெண்களின் பெருமைகளை எடுத்துரைத்தார். இக்குழுவின் மூலம் குறைந்த வட்டியில் வங்கிக் கடன் மற்றும் விதவை, கணவனால் கைவிடப்பட்டோர் அரசு உதவித் தொகை பெறுவதற்கு உதவி செய்தல், போன்றவை செய்யப்பட்டு வருகிறது என்று கூறினார். மேலும் சுயஉதவிக்குழு மூலம் இப்பகுதி மாணவ, மாணவிகள் ஓவியம் வரைதல், நடனப்பயிற்சி, கீ போர்டு வாசித்தல் போன்ற பயிற்சிகள் பெறுவதற்கு அறிமுகப்படுத்தப்பட்டது.