கும்மிடிப்பூண்டி: தனியார் விளையாட்டு பயிற்சி நிறுவனம் சார்பில் புதிய உலக சாதனை படைப்போம் என்ற மந்திரத்தை முன்னெடுத்து சென்னையில் உள்ள யுனிவர்செல் அச்சீவர்ஸ் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் என்ற உலக சாதனை நிறுவனம் மற்றும் புதுக்கோட்டை ஆத்மா யோகா மையம் மூலம் யோகா உலக சாதனை நிகழ்ச்சி இணையவழி மூலம் நடைபெற்றது.
இதில் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் இருந்தும், தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்தும் மொத்தம் 875 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். ஒவ்வொரு பங்கேற்பாளரும் 10 யோகாசனங்கள் வீதம் 8 ஆயிரத்து 750 யோகாசனங்களை ஒரேநாளில் 8 ஆயிரத்து 750 மனித ஆற்றல் நிமிடங்களில் பல்வேறு இடங்களில் இருந்து செய்தனர்.
அதில் கும்மிடிப்பூண்டி அடுத்த பெருவாயல் டி.ஜெ.எஸ். பப்ளிக் பள்ளி மாணவ, மாணவிகளும் பங்கேற்று உலக சாதனை படைத்தனர். உலக சாதனை படைத்த டி.ஜெ.எஸ். பப்ளிக் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் டி.ஜெ.எஸ்.கல்வி குழுமத்தின் தலைவர் மற்றும் கல்வி நெறிக்காவலர் டி.ஜெ.கோவிந்தராஜன், கல்விக் குழும இயக்குனர் மற்றும் பப்ளிக் பள்ளியின் தாளாளர் தமிழரசன், பள்ளியின் முதல்வர் அசோக் மற்றும் கல்வி குழுமத்தின் நிர்வாக அலுவலர் ஏழுமலை, யோகா பயிற்சி ஆசிரியர் சந்தியா ஆகியோர் கலந்துகொண்டனர். தொடர்ந்து யோகாவில் உலக சாதனை படைத்த டி.ஜெ.எஸ்.பப்ளிக் பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டது.