×

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள்: க.சுந்தர் எம்எல்ஏ வழங்கினார்

செய்யூர்: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில், திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா, சரவம்பாக்கம் கிராமத்தில் நேற்று நடந்தது. அதில், ₹5 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மதுராந்தகம் தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் பொன்.சிவகுமார் தலைமை தாங்கினார். அவை தலைவர் வெங்கடேசன், ஒன்றிய கவுன்சிலர் பிரியா சக்கரபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய பொருளாளர் ஜெய்சங்கர் வரவேற்றார்.

காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ, எம்பி செல்வம் ஆகியோர் கலந்துகொண்டு 14 பெண்களுக்கு தையல் இயந்திரம், 10 சலவை தொழிலாளர்களுக்கு இஸ்திரி பெட்டி, 4 மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சக்கர சைக்கிள், ஒரு விவசாயிக்கு மருந்து தெளிப்பான், கொரோனாவால் உயிரிழந்த திமுக நிர்வாகிகள் 4 பேரது குடும்பங்களுக்கு தலா ₹10,000, ஒரு விவசாயிக்கு 2 ஆட்டு குட்டிகள், இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் ஆகியவை வழங்கினர்.

நிகழ்ச்சியில், மாவட்ட குழு பெருந்தலைவர் செம்பருத்தி துர்கேஷ், மாவட்ட கவுன்சிலர் ராஜா ராமகிருஷ்ணன், ஒன்றிய நிர்வாகிகள் கிணார் அரசு, சிகாமணி, தணிகை அரசு, பத்மா செல்வராஜ், ஒன்றிய கவுன்சிலர்கள் தரணி பாஸ்கர், ரோக்பாலசக்கர்தர், லதா மனோகர், விவசாய அணி நிர்வாகி குமார், பாக்கம் சக்திவேல் உள்பட கலந்து கொண்டனர்.

தொடர்ந்து பாக்கம் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில், தனியார் அறக்கட்டளை சார்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் திறப்பு விழா நடந்தது. மாவட்ட செயலாளர் க.சுந்தர், எம்.பி.செல்வம் கலந்து கொண்டு, சுத்திகரிப்பு இயந்திரத்தை திறந்து வைத்தனர். இதில், அறக்கட்டளை நிர்வாகி செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Chief Minister ,MK Stalin ,K. Sundar ,
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...