ஆண்டிபட்டி, மார்ச் 5: ஆண்டிபட்டியில் இருந்து கிராமங்களுக்கு போதிய பஸ் வசதி இல்லாததால் மாணவ, மாணவியர் படிக்கட்டுகளில் தொங்கிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, கூடுதல் பஸ் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி வளர்ந்து வரும் பேரூராட்சியாக உள்ளது. இந்த நகரில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். நகரில் அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளி, உயர்நிலைப்பள்ளி, துவக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, தனியார் பள்ளி என சுமார் 10க்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன.
இதில், குறிப்பாக அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். ஆண்டிபட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் அரசு பஸ்களில் ஆண்டிபட்டி பள்ளிகளுக்கு வந்து செல்கின்றனர். இதில், ஆண்டிபட்டியில் இருந்து தேனி, க.விலக்கு, பாலக்கோம்பை, ஏத்தக்கோவில், வைகை அணை, பெரியகுளம், வத்தலக்குண்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு அரசு டவுன் பஸ்கள் சென்று வருகின்றன. இந்நிலையில், நகரில் இருந்து கிராம பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் பற்றாக்குறையாக இருப்பதால், பள்ளி முடிந்த பிறகு மாணவ, மாணவியர் அவர்களில் வீட்டிற்கு செல்வதற்கு சிரமப்படுகின்றனர்.
போதுமான பஸ் வசதி இல்லாததால் பஸ் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர். மேலும், வத்தலக்குண்டு பகுதியில் இருந்து ஆண்டிபட்டிக்கு வரும் பஸ்கள் பாதி தூரம் வந்து, நேரமாகி விட்டதால் நகருக்குள் வராமல் திரும்பிச் செல்வதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதனால் மாணவ, மாணவிகள் நீண்ட நேரம் பஸ்நிலையத்தில் காத்திருக்கின்றனர். எனவே ஆண்டிபட்டி சுற்றியுள்ள கிராம பகுதிகளில் இருந்து அதிகப்படியான பஸ்கள் இயக்க வேண்டும். வத்தலக்குண்டு பகுதியில் இருந்து வரும் பஸ்கள் முறையாக நகர் பகுதிக்குள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளி மாணவ, மாணவியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.