×

திருமயம் பகுதியில் பங்குனி திருவிழா களை கட்டியது

திருமயம், மார்ச் 4: திருமயம் பகுதியில் பங்குனி திருவிழா களைகட்ட துவங்கியது. இதையொட்டி நடந்த பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பூ தட்டு எடுத்து வழிபாடு நடத்தினர். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே இளஞ்சாவூர் முத்துமாரி அம்மன் அப்பகுதியில் மிகவும் பிரசிதிபெற்ற தெய்வமாகும். இங்கு வருடம் தோறும் விமரிசையாக நடைபெறும். நேற்று முன்தினம் பங்குனி விழாவில் தொடக்கமாக பூச்சொரிதல் விழா நடந்தது. இதில் திருமயம், கடியாபட்டி, கோட்டையூர், வீரபட்டி, மணவாளன்கரை, மகமாயிபுரம், இளஞ்சாவூர், சித்தளஞ்சாபட்டி, செங்காவிடுதி, அரசம்பட்டி, லெனாவிலக்கு, புலிவலம் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட இடங்களில் இருந்து மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் பக்தர்கள் பூத்தட்டு வைத்து ஆட்டம் பாட்டத்துடன் ஊர்வலமாக வந்து அம்மனுக்கு செலுத்தி வழிபாடு நடத்தினர்.

இதனை அடுத்து திருமயம் சுற்றுவட்டார கிராமங்களில் கரகாட்டம், புராண நாடகம், நாட்டுப்புற பாட்டு, கபாடி போட்டி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தபட்டது. பக்தர்களின் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. விழாவை காண சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர். திருமயம் போலீசார் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். இதனிடையே வரும் 7ம் தேதி காப்பு கட்டுதலுடன் முதல் திருவிழா நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து பல்வேறு சமூதாயத்தாரின் மண்டகப்படி முன்னிட்டு 10 நாட்கள் திருவிழா நடைபெறும். வரும் 15ம் தேதி விழாவின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா, பொங்கல் திருவிழா நடைபெறும். அன்று மாலை நடைபெறும் கரகம் எடுக்கும் முக்கிய நிகழ்வு நடைபெற உள்ளது. திருவிழா நடைபெறும் ஒவ்வொரு நாள் இரவும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யபட்டு வழிபாடு நடத்தப்படுவதோடு பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இதனை தொடர்ந்து 17ம் தேதி காப்பு களையப்பட்டு விழா முடிவுபெறும்.

Tags : Panguni ,Thirumayam ,
× RELATED கொடைக்கானலில் 22 ஆண்டுக்குப் பிறகு...