சென்னை: முகப்பேர் கிழக்கு வளையாபதி சாலையை சேர்ந்த வைத்தியநாதன் (22), கடந்த 1ம் தேதி வீட்டின் அருகே நடந்து சென்றபோது, பைக்கில் வந்த 4 பேர், இவரை வழிமறித்து பணம், செல்போனை பறிக்க முயன்றனர். ஆனால், வைத்தியநாதன் கூச்சலிட்டதால், ஆத்திரமடைந்த 4 பேர், அவரை சரமாரியாக தாக்கி பணம் மற்றும் செல்போனை பறித்துக்கொண்டு தப்பினர். இந்த மர்ம கும்பல், அதே பகுதியில் பைக்கில் வந்த முகப்பேர் பாடி குப்பம் நகரை சேர்ந்த தாமோதரன் (26) என்பவரையும் கல்லால் தலையில் தாக்கி, செல்போனை பறித்து சென்றது.
இதில், படுகாயமடைந்த தாமோதரனுக்கு 8 தையல்கள் போடப்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில், ஜெ.ஜெ.நகர் போலீசார் வழக்கு பதிந்து, சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து விசாரித்தனர். அதில், பாடி புதுநகர் பகுதியை சேர்ந்த வழிப்பறி கொள்ளையன் பாரதிதாசன் (எ) சைக்கோ பாரதி (22) மற்றும் கல்லூரி மாணவர்கள் சஞ்சய் (19), சர்புதீன் (19) என தெரிய வந்தது. அவர்களை கைது செய்து கத்தி, செல்போனை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.