கோபால்பட்sடி, மார்ச் 2: சாணார்பட்டி அருகே காம்பார்பட்டியில் அமைந்துள்ளது மாதா புவனேஸ்வரி அம்மன் உடனுறை ஆத்ம லிங்கேஸ்வரர் 1008 சிவலிங்க ஆலயம். இங்கு நேற்று மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் கோயிலின் முன் யாகசாலை அமைத்து கணபதி ஹோமத்துடன் பூஜைகள் துவங்கின. தொடர்ந்து புண்யா ஹவாஜனம், மகா சங்கல்பம், வாஸ்து சாந்தி, பிரவேச பலி, மிருத்ஸங்க்ரஹம் யாகசாலை பூஜை, ருத்ரன் ஹோமம் நடந்தது. பின்னர் நாடி, சந்தனம், ரஷ்டாபந்தனம், வேதிகா, பூர்ணாஹூதி பூஜைகள் நடந்தன.
நேற்று புனித தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித தீர்த்தம் அடங்கிய குடங்களை மேளதாளம் முழங்க கோயிலை சுற்றி வந்தது. பின்னர் கோயில் கோபுரத்தின் உச்சிக்கு கொண்டு சென்று வேதமந்திரங்கள் முழங்க கலசத்தில் புனித தீர்த்தத்தை ஊற்றினர். அப்போது கருடன் வட்டமிட்டதை கண்டு பக்தர்கள் பக்தி பரவசமடைந்தனர். தொடர்ந்து 1008 சிவலிங்கங்களுக்கு தீபாராதனைகள் நடந்தன. பக்தர்களுக்கு புனித நீர், பூஜை மலர்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது. தொடர்ந்து அனைவருக்கும் அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் சாணார்பட்டி சுற்றுவட்டார கிராமங்கள் மட்டுமின்றி நத்தம், திண்டுக்கல் பகுதிகளில் இருந்து 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.