ஆவடி: பிரபல ரவுடிகள் இரண்டு பேரை போலீசார் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர். கொரட்டூர் கங்கை அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் அப்பன்ராஜ்(37). இவரது தம்பி விவேக்(30). இருவரும் பிரபல ரவுடிகள். இதில், அப்பன்ராஜ் மீது கொலை, கொலை முயற்சி, கொள்ளை உள்ளிட்ட 20 வழக்குகள் உள்ளன. விவேக் மீதும் கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட 10 வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த டிசம்பர் 3ம் தேதி திருமுல்லைவாயல் மேட்டுத் தெருவை சேர்ந்த ரவுடி ஆகாஷ்(25) என்பவரை நடுரோட்டில் ஓட, ஓட விரட்டி அப்பன்ராஜ், விவேக் ஆகியோர் வெட்டி கொல்ல முயன்றனர்.
இதுதொடர்பாக கொரட்டூர் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். மேலும் இருவரும் தொடர்ந்து குற்றச்செயலில் ஈடுபட்டு வருவது தெரியவந்தது. இதனையடுத்து, கொரட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி, குண்டர் தடுப்பு சட்டத்தில் கீழ் அப்பன்ராஜ், விவேக் இருவரையும் சிறையில் அடைக்க ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோருக்கு பரிந்துரை செய்தார். பின்னர், அவர் பரிந்துரையை ஏற்று இருவரையும் ஒரு வருடம் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க அவர் உத்தரவு பிறப்பித்தார்.
மேலும், அப்பன்ராஜ், விவேக் இருவரும் கொலை முயற்சி வழக்கில் புழல் சிறையில் இருப்பதால், இந்த உத்தரவை கொரட்டூர் போலீசார் சிறை கண்காணிப்பாளரிடம் நேற்று ஒப்படைத்தனர். இதனையடுத்து, இருவரும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். முதல் முறையாக ஆவடி போலீஸ் கமிஷனரகம் உருவாகி பிறகு, இரண்டு பேர் மீது குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.