துவரங்குறிச்சி, மார்ச் 1: மணப்பாறை அருகே நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்த கார் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த வையம்பட்டி சந்தைபேட்டையில் மளிகைக்கடை வைத்து நடத்தி வருபவர் மோகன்ராஜ் (36). இவர் தனது காரில் நேற்று மாலை வையம்பட்டியிலிருந்து திருச்சிக்கு புறப்பட்டார். திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மணப்பறை அடுத்த கண்ணுடையான்பட்டி பிரிவு அருகே கார் வந்தபோது திடீரென காரிலிருந்து புகை வந்துள்ளது. உடனடியாக காரை நிறுத்திய மோகன்ராஜ் கீழே இறங்கி பார்த்தார். அப்போது திடீரென கார் தீப்பற்றி எரிந்தது. அதனைத்தொடர்ந்து, மோகன்ராஜ் அளித்த தகவலின்பேரில் மணப்பாறை தீயணைப்புத்துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்து குறித்து மணப்பாறை போலீசார் விசாரித்து வருகின்றனர். தீப்பற்றி எரிந்ததால் திருச்சி- திண்டுக்கல் சாலையில் சுமார் 1 மணிநேரம் போக்குவரத்து மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டது. உடனடியாக கீழே இறங்கியதால் கார் உரிமையாளர் உயிர் தப்பினார்.