அந்தியூர், மார்ச் 1: ஈரோட்டில் இருந்து வேளாங்கண்ணி செல்லும் பேருந்து சேவையை அந்தியூரில் இருந்து நீடித்தும், அதேபோல் சத்தியமங்கலத்தில் இருந்து தாளவாடி பேருந்து சேவையை அந்தியூரில் செயல்படுத்தவும் தமிழ்நாடு போக்குவரத்து கழகத்திற்கு எம்எல்ஏ அந்தியூர் ஏ.ஜி. வெங்கடாசலம் கோரிக்கை விடுத்திருந்தார்.
அதன்பேரில், நேற்று பேருந்து நிலையத்தில் இந்த 2 பேருந்துகளுக்கான சேவைகளை எம்எல்ஏ அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் கொடி அசைத்து துவக்கி வைத்தார். அந்தியூரில் இருந்து தினமும் காலை 8.55க்கு வேளாங்கண்ணி புறப்பட்டு, இரவு 7.45 சென்றடையும்.
இதேபோல் அன்று இரவே மீண்டும் 9.00 க்கு புறப்பட்டு மறுநாள் காலை 7 மணிக்கு பவானி வந்தடையும். தாளவாடிக்கு தினமும் காலை 6.15க்கு புறப்பட்டு 10 மணிக்கு சென்றடையும். மீண்டும் மாலை 6.30 மணிக்கு புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு அந்தியூர் வந்தடையும்.
இதன் துவக்க விழாவில் அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் ஆறுமுகம், பொதுமேலாளர் குமார், கிளை மேலாளர் சண்முகம், பேரூர் திமுக பொறுப்பாளர் காளிதாஸ், துணைச்செயலாளர் பழனிச்சாமி, மாவட்ட மகளிரணி அமைப்பாளர் பாண்டியம்மாள், யாஸ்மின் தாஜ் சையது முஸ்தபா, கௌரி, மணிகண்டன், சன்ரைஸ் சிவக்குமார், தொமுச நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
தாளவாடி மற்றும் வேளாங்கண்ணிக்கு அந்தியூரில் இருந்து பேருந்து சேவைகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.