×

ரங்கம் பகுதி கடைகளில் கலப்பட டீத்தூள், காலாவதி குளிர்பானம் பறிமுதல்

திருச்சி, பிப். 25: திருச்சி ரங்கம் பகுதியில் 29 குளிர்பானம் மற்றும் தேநீர் கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கொண்ட குழுவினர் நேற்றுமுன்தினம் ஆய்வு செய்தனர். இதில் 55 லிட்டர் குளிர்பானங்களில் தேதி குறிப்பிடாமலும், காலாவதியாகி இருந்ததும் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதைதொடர்ந்து 8 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஆய்வின்போது அம்மா மண்டபம் அருகில் உள்ள தேநீர் கடையில் 5 கிலோ கலப்பட டீ தூள் இருந்தது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் கடைக்காரரிடம் நடத்திய விசாரணையில், திருச்சி குஜிலி தெருவை சேர்ந்த முஹம்மது ரபிக் என்பவர் தேயிலை தூள் விற்பனை செய்வது தெரியவந்தது.

இதையடுத்து அவரது ஏஜென்சியில் ஆய்வு செய்து 45 கிலோ டீ தூள் பறிமுதல் செய்யப்பட்டது. முஹம்மது ரபிக் மீது வழக்கு தொடுப்பதற்காக உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு தமிழக அரசின் உணவு பகுப்பாய்வு கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் கலப்பட தேயிலை தூள் விற்பனைக்காக பயன்படுத்திய பைக் பறிமுதல் செய்து கோர்ட்டில் ஒப்படைக்கப்படவுள்ளது. ஆய்வின்போது உணவு பாதுகாப்பு அலுவலர் ஸ்டாலின், வசந்தன், மகாதேவன், ஜஸ்டின், அன்புச்செல்வன் உடனிருந்தனர். இதுகுறித்து மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு கூறுகையில், கலப்பட தேயிலை தூளை விற்பனை செய்யவோ, பதுக்கி வைக்கவோ கூடாது. குளிர்பானங்களில் காலாவதி தேதி மற்றும் தயாரிப்பு தேதியை பார்த்து பொதுமக்கள் வாங்க வேண்டும். இதுபோன்ற கலப்படம் கண்டறிந்தால் 9944959595, 9585959595, 9444042322 என்ற எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்றார்.

Tags : Aurangabad ,
× RELATED பிபிசி தலைவராக இந்தியர் நியமனம்